ECONOMYNATIONAL

பிகேஆர், பக்கத்தான் துரோகிகள் வசமிருக்கும் தொகுதிகளில் போட்டியிடத் தயார்- அன்வார் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, செப் 29- வரும் 15வது பொதுத் தேர்தலில் கெஅடிலான் (பிகேஆர்.) மற்றும் பக்கத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூட்டணிக்கு துரோகமிழைத்தவர்கள் வசமிருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடத் தாம் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

எனினும், தாம் போட்டியிடவிருக்கும் தொகுதி எது என்பதை கெஅடிலான் கட்சித் தலைவருமான அவர் குறிப்பிடவில்லை. தாம் போட்டியிடும் தொகுதி  பிகேஆர் மற்றும் பக்கத்தானுக்கு கூடுதல் அனுகூலம் தரக்கூடிய இருக்க வேண்டும் என்பதை மட்டும் அவர் கோடி காட்டினார்.

உண்மையைச் சொல்லப் போனால் போட்டியிடப் போகும் நாடாளுமன்றத் தொகுதியை நான் இன்னும் தேர்வு செய்யவில்லை. பிகேஆர் மற்றும் பக்கத்தான் ஹராப்பான் துரோகிகள் வசமிருக்கும் தொகுதிகளில் போட்டியிட நான் ஆலோசித்து வருகிறேன். கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்படி கட்சி கூறினால் நான் அவ்வாறு செய்வேன் என அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், சிலாங்கூர் பத்திரிகையாளர் கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் இடம்பெற்ற கேள்வி பதில் அங்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போர்ட்டிக்சன் தொகுதி மக்களின் உணர்வும் ஆதரவும் கடந்த 2018 ஆம் ஆண்டு இடைத் தேர்தலில் தாம் போட்டியிட்ட போது இருந்ததை விட தற்போது அதிகமாக உள்ளதாக  அன்வார் சொன்னார்.


Pengarang :