ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்தை எதிர்கொள்ள வாகனங்கள், தளவாடங்கள் தயார்- எம்.பி.கே. அறிவிப்பு

ஷா ஆலம், செப் 30- கடல் பெருக்கின் காரணமாக ஏற்படும் வெள்ளத்தை எதிர்கொள்ள கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.) 25 பல்வகைப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் தளவாடங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

இப்பேரிடரை எதிர்கொள்ள 146 பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளதாக நகராண்மைக் கழகத்  தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

வெள்ளம் ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்வதற்காக வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் பயன்படும் நிலையில் உள்ளதை உறுதி செய்துள்ளதோடு 146 பணியாளர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்று கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

வடகிழக்கு பருவமழையின் போது கடலில்  அலைகள் 5.5 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வாண்டு இறுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு கடந்த இரு தினங்களாக பேரிடர் மீட்புப் பயிற்சியை நடத்தியது. இப்பயிற்சியில் அரசு துறைகளுக்கிடையிலான தொடர்பு சம்பந்தப்பட்ட அம்சத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ளபடி மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) சரிபார்த்து புதுப்பிக்கும் பணிகளும் இந்த பயிற்சியின் போது மேற்கொள்ளப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.


Pengarang :