கோலாலம்பூர், அக் 4- தனது பராமரிப்பில் இருந்த எட்டு மாத குழந்தைக்கு முகம் மற்றும் காதுகளில் காயம் ஏற்படும் அளவுக்கு அலட்சியமாக இருந்தது தொடர்பில் 43 வயதுடைய குழந்தை பராமரிப்பாளர் ஒருவரை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.
இவ்விவகாரம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை குழந்தையின் தாயார் போலீஸ் புகார் செய்ததைத் தொடர்ந்து அம்பாங், தாமான் புத்ராவில் உள்ள வீட்டில் இரவு 11.45 மணியளவில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் முகமது ஃபாரூக் எஷாக் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை 32 வயதான குழந்தையின் தாய் பராமரிப்பாளரின் வீட்டிலிருந்து மாலை 5.40 மணியளவில் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார்.
அக்குழந்தையின் முகம், மற்றும் இரு காதுகளிலும் கடிக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் உள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பின்னர் பரிசோதனைக்காக அம்பாங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுச் சென்றுள்ளார் என்று அவர் அறிக்கையில் கூறினார்.
அந்த குழந்தை பராமரிப்பாளர் தனது எட்டு மற்றும் 16 வயதுடைய இரு பிள்ளைகளிடம் அக்குழந்தையை ஒப்படைத்து விட்டு தனிப்பட்ட பணிகளை கவனிப்பதற்காக வெளியே சென்றிருந்த போது அவ்விருவரும் அக்குழந்தையை கடித்து காயப்படுத்தியதாக நம்பப்படுகிறது.
மூன்று மாதங்கள் முதல் இரண்டு வயது வரையிலான ஆறு குழந்தைகளைப் பராமரித்து வந்த அந்த மாது புதன்கிழமை வரை விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பாரூக் கூறினார்.