ANTARABANGSAECONOMY

சி.என்.என். தொலைக்காட்சி மீது ட்ரம்ப் அவதூறு வழக்கு- 47.5 கோடி டாலர் இழப்பீடு கோருகிறார்

வாஷிங்டன், அக் 4- கேபிள் நியுஸ் நெர்வோர்க் (சி.என்.என்.) தொலைக்காட்சி நிறுவனம் மீது முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

தன்னை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதற்காக அந்நிறுவனம் தனது ஒளிபரப்பு தளத்தைப் பயன்படுத்தியதாக அவர் அந்த அவதூறு வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் பற்றிய எதிர்மறையான செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்தது தவிர்த்து அவரைப்பற்றிய நேர்மறையான செய்திகளையும் சி.என்.என். புறக்கணித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி,  தனது கட்சிக்காரரை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதற்காக நம்பகமான செய்தி நிறுவனம் என்ற தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவதூறான செய்திகளை பார்வையாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் அது சேர்த்துள்ளது என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளதாக ஸ்புட்னிக் செய்தி  நிறுவனம் தெரிவித்தது.

கடந்த 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்கடிக்கப்படுவதற்கு தாங்களே காரணம் என சி.என்.என். கூறிக் கொள்வதற்கு அந்த அவதூறான பிரசாரங்கள் முக்கியமானவையாக விளங்கின என்றும் கூறப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பை இனவாதியாகவும் ரஷியாவின் கையாளாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சி.என்.என். சுமத்தியதோடு ஹிட்லரோடும் அவரை ஒப்பிட்டுள்ளது என அந்த மனு குறிப்பிட்டது.

ட்ரம்ப் தண்டிப்பு இழப்பீடாக 47.5 கோடி டாலரும் பாதிப்பு இழப்பீடாக 75,000 டாலரும் கோரியுள்ளார். எனினும், சரியான இழப்பீட்டுத் தொகை விசாரணையின் போது தெரிய வரும்.


Pengarang :