ஷா ஆலம், அக் 5- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை நேற்று 1,483 ஆகப் பதிவானது. கடந்த சில தினங்களாக இந்த எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 1,626 பேரும் 2ஆம் தேதி 1,360 பேரும் 3ஆம் தேதி 1,244 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 46 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்பொது 22,957 பேர் நோய்த் தொற்றின் தீவிர பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 21,958 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 957 பேர் மருத்துவமனைகளிலும் 42 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 63.4 விழுக்காட்டு தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகள் பயன்பாட்டில் உள்ள வேளையில் அவற்றில் 11.5 விழுக்காடு கோவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 தொடர்புடைய ஐந்து மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து இந்நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 36,385 ஆக உயர்வு கண்டுள்ளது