கோலாலம்பூர், அக் 5 - வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் (ஆர்.டி.பி.) மூலம் மேற்கொள்ளப்படும் நீண்ட கால மற்றும் குறுகிய கால நடவடிக்கைகள் நாட்டில் வெள்ள அபாயத்தைத் தொடர்ந்து குறைக்கும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 1,053 கோடி வெள்ளி மதிப்புள்ள 100 வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் நாடு முழுவதும் செயல் படுத்தப் பட்டு வருவதாக அவர் கூறினார். ஆர்.டி.பி. திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப் படாத மக்களின் எண்ணிக்கையும் இடங்களும் அதிகரிக்கும் என்று ரவூப் தொகுதி உறுப்பினர் தெங்கு சூல்புரி ராஜா பூஜியின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார். லா நினா பருவநிலை மாற்றம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படக் கூடிய எதிர்பாராத மழை மற்றும் பெரு வெள்ளத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகள் குறித்து தெங்கு சூல்புரி கேள்வியெழுப்பியிருந்தார். வெள்ளத்தின் பாதிப்பைக் குறைப்பதற்காக வடிகால் பராமரிப்பு, ஆற்றை ஆழப்படுத்துதல் மற்றும் ஆற்றின் கரைகளை உயர்த்துதல் போன்ற குறுகிய காலத்தில் குறைந்த செலவில் மேற்கொள்ளக்கூடிய அதிக தாக்கம் கொண்ட பணிகளில் வடிகால் நீர் பாசனத் துறை கவனம் செலுத்துகிறது என்று துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/10/FW1260131_JB03_05102022_BANJIR-1536x1024-1-960x640.jpg)