MEDIA STATEMENTNATIONAL

சாலை சமிக்ஞை விளக்கு மீறல்- 16,163 வாகனங்களுக்கு குற்றப்பதிவு

கோலாலம்பூர், அக் 5– செப்டம்பர் மாதம் 15 முதல் 30 வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிவப்பு சமிக்ஞை விளக்குகளை மீறும் வாகனங்களுக்கு எதிரான சிறப்பு சோதனை நடவடிக்கையில் 16,163 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறுவோரை இலக்காக கொண்ட இந்த நடவடிக்கையில்  8,211 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் 6,083 காரோட்டிகளுக்கும் 528 லோரி ஓட்டுநர்களுக்கும் 264 வேன் ஓட்டுநர்களுக்கும் 22 பஸ் ஓட்டுநர்களுக்கும் 1,055 இதர வாகன ஓட்டுநர்களுக்கும் குற்றப்பதிவு வழங்கப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் படை செயலாளர் டத்தோ நோர்ஷியா சாஹூடின் கூறினார்.

இந்த சோதனையில் 71,069 வாகனங்கள் சோதனையிடப்பட்ட வேளையில் இதர குற்றங்களுக்காக 24,276 சம்மன்களும் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

இது தவிர, 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் 27 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாலை சமிக்ஞை விளக்குகளை பொருட்படுத்தாத வாகனமோட்டிகளின் செயலால் அதிக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனமோட்டிகளின் இத்தகைய பொறுப்பற்ற செயலை காவல் துறை கடுமையாக கருதுகிறது என்று அவர் சொன்னார்.

நாடு முழுவதும் 1,659 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 1,541 போலீஸ்காரர்கள் பங்கேற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :