ஷா ஆலம், அக் 7- நாட்டின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் சிலாங்கூரில் இரு பள்ளிகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜப்ருள் தெங்கு அஜிஸ் அறிவித்துள்ளார்.
சைபர் ஜெயா 2இல் தேசிய பள்ளியும் ஷா ஆலம், டெனாய் ஆலமில் இடைநிலைப்பள்ளியில் அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் என அவர் கூறினார்.
சிலாங்கூர் தவிர்த்து திரங்கானு, சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களில் மேலும் மூன்று பள்ளிகள் கட்டப்படும் என அவர் சொன்னார்.
வட்டார மக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசாங்கம் 43 கோடி வெள்ளி செலவில் மேலும் ஐந்து புதிய பள்ளிகளை நிர்மாணிக்கும் என்று நாடாளுமன்றத்தில் அவர் இன்று தெரிவித்தார்.
அடுதாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு 5,560 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக நிதி ஒதுக்கீட்டை பெற்ற இரண்டாவது அமைச்சாக அது விளங்குகிறது.
மிக அதிகமாக நிதியமைச்சுக்கு 7,220 கோடி வெள்ளியும் சுகாதார அமைச்சுக்கு 3,610 கோடி வெள்ளியும் அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.
வரும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு 37,230 கோடி வெளியாகும் என தெங்கு ஜப்ருள் சொன்னார். கடந்த 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு 33,200 கோடி வெள்ளியும் 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு 32,200 கோடி வெள்ளியும் ஒதுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
மொத்த ஒதுக்கீட்டில் 27,230 கோடி வெள்ளி நிர்வாகச் செலவினங்களுக்கு 9,500 கோடி வெள்ளி மேம்பாட்டிற்கும் 500 கோடி வெள்ளி கோவிட்-19 நிதி வாரியத்திற்கும் 200 கோடி வெள்ளி எதிர்பாராத செலவினங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.