ஷா ஆலம், அக் 8- நூறு வெள்ளி மதிப்புள்ள சிலாங்கூர் ஹலால் பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 16 மைடின் பேரங்காடி கிளைகளில் தங்களுக்கு தேவையான சமையல் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த பற்றுச்சீட்டுகளைக் கொண்டு சமையல் எண்ணெய், போதுமை, சீனி உள்ளிட்டப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது போஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள விளக்கப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலாங்கூர் ஹலால் பற்றுச் சீட்டுகளை பெற்றவர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள 16 கிளைகளில் 100 வெள்ளி மதிப்புள்ள சமையல் பொருள்களை இலவசமாக வழங்க மைடின் மலேசியா நிறுவனம் முன்வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சிரமத்தில் உள்ளவர்களின் வாழ்க்கைச் செலவினத்திற்கு இந்த பற்றுச்சீட்டுகள் ஓரளவு உதவும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 2,800 வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 100 வெள்ளிக்கான சிலாங்கூர் ஹலால பற்றுச் சீட்டுகளை செப்டம்பர் மாதம் பெறுவர் என அமிருடின் கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் தேர்நதெடுக்கப்பட்ட நான்கு இடங்களிலிருந்து இந்த உதவிப் பொருள்களை பெற்றுக் கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.