MEDIA STATEMENTPBTSELANGOR

தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ செர்டாங் தொகுதியில் 350 பேருக்கு 100 ரிங்கிட் பற்றுச் சீட்டு விநியோகம்

ஷா ஆலம், அக் 10- இம்மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிபை முன்னிட்டு ஸ்ரீ செர்டாங் தொகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 350 குடும்பங்களுக்கு மாநில அரசின் ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் பற்றுச் சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.

ஸ்ரீ கெம்பாங்கான்  ஜயண்ட் பேரங்காடியில் இந்த பற்றுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீ செர்டாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

தீபாவளியைக் கொண்டாடுவதில் ஏற்படும் நிதிச்சுமையை ஓரளவு குறைப்பதில் மாநில அரசின் இந்த உதவித் திட்டம் ஓரளவு துணை புரியும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

இந்த திட்டத்திற்கு தகுதி பெற்ற அனைவருக்கும் ஏக காலத்தில் ஜயண்ட் பேரங்காடியில் பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. பெருநாளுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு உண்டாகும் செலவை ஈடுசெய்வதில் இந்த பற்றுச்சீட்டுகள் ஓரளவு துணை புரியும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

மாநில மக்களின் நலன் மற்றும் சுபிட்சத்தை காப்பதற்கான நீண்ட காலத் திட்டமாக விளங்கும் இந்த ஜோம் ஷோப்பிங் திட்டம் மாநில அரசினால் அமல்படுத்தப்பட்டது.

 


Pengarang :