கோலாலம்பூர், அக் 12- பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பதற்கு தேர்தல் ஆணையம் இம்மாதம் 20 ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
சபா மாநிலத்தின் புகாயா சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்கான தேதியும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் கூறினார்.
புத்ராஜெயாவிலுள்ள மெனாரா எஸ்.பி.ஆர். தலைமையகத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே தலைமையேற்பார் என்று அவர் தெரிவித்தார்.
பதினைந்தாவது பொதுத் தேர்தல் மற்றும் புகாயா சட்டமன்றத் இடைத் தேர்தல் ஆகியவை தொடர்பில் வேட்பு மனுத் தாக்கல், வாக்களிப்பு தேதி மற்றும் இத்தேர்தல்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியல் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த கூட்ட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் கூட்டம் ஒன்றும் நடத்தப்படும் என அவர் சொன்னார்.
பதினந்தாவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கடந்த திங்கள்கிழமை வெளியிட்டார்.