ஷா ஆலம், அக் 9- இம்மாதம் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் சிலாங்கூர் மகளிர் நல மற்றும் தொண்டு அமைப்பின் (பெகாவானிஸ்) ஏற்பாட்டில் கின்ராரா தொகுதியில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 25 பங்கேற்பாளர்கள் பட்டம் தயாரிக்கும் கைவினைத் திட்டத்தில் பங்கேற்றனர். பதிமூன்று முதல் 50 வயது வரையிலான சமூகத்தின் அனைத்து தரப்பிலான மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதானது கைவினைப் பொருட்கள் மற்றும் கலை, கலாசாரத்தை நேசிக்கும் மனப்பான்மை மக்கள் மத்தியில் இன்னும் வளமாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது என்று பெக்காவானிஸ் தலைவர் மஸ்டியானா முகமது கூறினார். வாவ் எனப்படும் பட்டம் போன்ற கைவினைப்பொருட்களையும் கலை, கலாசாரங்களையும் நேசிக்கும் மனப்பான்மை மலாய் சமூகத்தை விட சீன மற்றும் இந்திய சமூகத்தில் அதிகமாக காணப்படுவதை இது காட்டுகிறது. இந்த கலையை கற்றுக்கொள்ள வார இறுதி நாட்களை செலவிட அவர்கள் தயாராக உள்ளனர் என்று அவர் இந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கின்ராரா சட்டமன்ற உறுப்பினரும் ஊராட்சி புது கிராம மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான இங் ஸீ ஹானும் கலந்து கொண்டார். இதற்கிடையில் நாட்டின் பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்களை ஒன்றாகப் பகிர்ந்து கொள்வதற்கும் மக்களிடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஏதுவாக இதுபோன்ற கலைத் திட்டங்களை தொடர்ந்து நடத்த தாங்கள் விரும்புவதாக பெக்காவானிஸ் துணைத் தலைவர் லிம் பே எங் தெரிவித்தார்