ஷா ஆலம், அக் 12- வெள்ளத்தை எதிர்கொள்வது தொடர்பான பயிற்சியில் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பின் (செர்வ்) 40 உறுப்பினர்கள் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து நாளை தொடங்கி நான்கு நாட்களுக்கு பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
எதிர்காலத்தில் அவசர சூழல்களில் உதவுவதற்கு ஏதுவாக அந்த உறுப்பினர்களுக்கு தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சியும் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் களத்தில் இறங்கி உதவிகளை வழங்குவர். அதே வேளையில், தன்னார்வலர் தீயணைப்பு, பகுதி நேர தீயணைப்பு சமூக தீயணைப்பு மற்றும் அரசு சாரா தீயணைப்பு குழுக்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அடையாளம் கண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
இங்குள்ள செக்சன் 15 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தயார் நிலை திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இனிடையே, இளைஞர்களை உள்ளடக்கிய 40 செர்வ் உறுப்பினர்களுக்கு வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை நீரிலிருந்து காப்பாற்றுவதற்கான பயிற்சியும் வழங்கப்படும் என்று மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.
இது தவிர, அவர்களுக்கு செயற்கை சுவாசப் பயிற்சியும் வழங்கப்படும். பேரிடரின் உண்மை நிலையை அறிந்து கொள்ள அவர்களுக்கு பூச்சோங்கிலுள் ஈயலம்பம் ஒன்றில் பயிற்சி வழங்கப்படும் என்றார் அவர்.
செர்வ் தன்னார்வலர் அமைப்பை உருவாக்குவதற்கு மாநில அரசு 100,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.