சபாக் பெர்ணம், அக் 16- இம்மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1,400 வசதி குறைந்த குடும்பத்தினர் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ளவர்களுக்கு தலா 100 ரிங்கிட் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மகளிர் சமூக நல மன்றத் (பெக்காவானிஸ்) தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார். இதன் மூலம் அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்குரிய சூழலை ஏற்படுத்தவும் இயலும் என அவர் சொன்னார். சமூகத்தின் குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் நலன் காப்பது சிலாங்கூர் மகளிர் நல மன்றத்தின் தலையாய நோக்கமாக உள்ளது என்றார் அவர். இந்த அமைப்பு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ரொக்க மற்றும் அத்தியாவசிய பொருளுதவிகளை வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். நாங்கள் குறிப்பாக, நோன்புப் பெருநாள், தீபாவளி, சீனப் புத்தாண்டின்போது உதவிகளை வழங்குகிறோம். விரைவில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு 1,400 வசதி குறைந்த பி40 தரப்பினர் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கவிருக்கிறோம் என்றார் அவர். சபாக் பெர்ணம் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை முன்னிட்டு இங்கு நடைபெற்ற தேநீர் விருந்து மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார். இந்த கலந்துரையாடல் நிகழ்வில் கட்டுப்பாடற்ற இணையப் பயன்பாட்டினால் சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2019/10/PSX_20191022_172005-1-960x640.jpg)