ஷா ஆலம், அக் 17 - சிலாங்கூர் மாநில அரசின் வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுவது நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் சாத்தியம் இருப்பதாக மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோடிகாட்டியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் அரண்மனைக்கு தெரிவிக்கும்படி மாநில சட்டமன்ற சபாநாயகரை தாம் கேட்டுக்கொள்ள விருப்பதாகவும் அவர் கூறினார். சிலாங்கூர் மாநிலத்தின் வரவுசெலவுத் திட்டம் வழக்கமாக அக்டோபர் மாதம் பிற்பகுதியில் சமர்ப்பிக்கப்படும். மாநில அதிகாரிகளில் பலர் 15ஆவது பொதுத் தேர்தல் பணிகளில் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார். இதனிடையே, இந்த தேர்தலில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவீர்களா என வினவப்பட்டபோது இது கட்சி எடுக்கும் முடிவைப் பொறுத்தாகும் என அவர் தெரிவித்தார். எங்களது நோக்கம் வெற்றி பெறுவதுதான் என சிலாங்கூர் பி.கே.ஆர் தலைவருமான அமிருடின் ஷாரி கூறினார். சிலாங்கூர் மாநில அரசின் வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 28 ஆம் தேதி தாக்கல் செய்ய முன்பு திட்டமிடப்பட்டிருந்தது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/12/DUN-Negeri-960x640.jpg)