ECONOMYMEDIA STATEMENT

குழந்தையைக் கொன்று மனைவி, முன்னாள் காதலியை காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

அலோர்ஸ்டார், அக் 20– தனது மூன்று மாத கைக்குழந்தையை படுகொலை செய்ததாக விவசாயி ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இம்மாதம் 4ஆம் தேதி இரவு 9.00 மணிக்கும் 10ஆம் தேதிக்கும் பிற்பகல் 1.30 மணிக்கும் இடையே சுங்கை லிந்தாங், கம்போங் தெலுக் ஜாவா முகமது அனாஸ் என்ற தன் மகனை கொலை செய்ததாக முகமது நஸ்ய்ரான் ஜம்சுரி (வயது 28) குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

மாஜிஸ்திரேட் சித்தி நோர்ஹிட்யா முகமது நோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கொலை வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்படவில்லை.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இதுதவிர தன் முன்னாள் காதலியை காயப்படுத்தியதாக குற்றச்சாட்டையும் நஸ்ய்ரான் எதிர்நோக்கியுள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரினார்.

தன் மனைவி சித்தி நுர் கமாலியா கமாருடின் (வயது 22) என்பவரை காயப்படுத்தியாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார். இக்குற்றத்திற்காக அவருக்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


Pengarang :