ஷா ஆலம், அக் 26- சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் (பிங்காஸ்) பெர்மாத்தாங் தொகுதியைச் சேர்ந்த 337 பேர் ஆண்டுக்கு 3,600 வெள்ளி உதவித் தொகையைப் பெறுகின்றனர்.
மாதம் 300 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவோரில் பெரும்பாலோர் புதியவர்கள் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பின்ர ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.
இந்த உதவித் திட்டத்திற்கு மொத்தம் 1,500 விண்ணப்பங்கள் கிடைத்தன. எனினும் பெர்மாத்தாங் தொகுதிக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு 337 மட்டுமே. இத்திட்டத்திற் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 10 விழுக்காட்டினர் கிஸ் எனப்படும அன்னையர் பரிவுத் திட்ட பயனாளிகள் ஆவர் என அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் வடபகுதி மாநிலங்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் சொன்னார்.
மொத்தம் 10 கோடியே 80 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் வழி மாநிலத்திலுள்ள சுமார் 80,000 பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.