ஷா ஆலம், அக் 28- இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்குவதற்காக மாநில அரசு சுமார் 23 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்களை வாங்க அவர்களுக்கு 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டு வழங்கப்பட்டதாக பரிவுமிக்க அரசுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
தொகுதிகளுக்கு கோட்டா அடிப்படையில் இதுவரை 22 லட்சத்து 95 ஆயிரம் வெள்ளி பகிர்ந்தளிக்க பட்டுள்ளது. சிரமத்தில் உள்ள மற்றும் அதிக பிள்ளைகள் கொண்ட குடும்பங்களை இலக்காக கொண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
வசதி குறைந்த மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பற்றுச்சீட்டைப் பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராங்காடிகளில் அதனைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார் அவர்.
மக்களின் நலன் மற்றும் சுபிட்சத்தை நீண்ட கால அடிப்படையில் காக்கும் முயற்சியின் அடிப்படையில் இந்த ஷோம் ஷோப்பிங் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
பெருநாள் காலத்தில் அந்தந்த இனங்களை சேர்ந்த வசதி குறைந்தவர்களுக்கு தொகுதி சேவை மையத்தின் வாயிலாக இந்த உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மாநில அரசு 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. அதில் 33.4 லட்சம் வெள்ளி கடந்த மே மாதம் கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாளின் போது பயன்படுத்தப்பட்டது.