கோலாலம்பூர், அக் 28 - பிரபல உள்ளூர் பாடகர்கள் சம்பந்தப்பட்ட கலைநிகழ்ச்சி மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் உள்ளூர் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். புதன்கிழமை இரவு 10.40 மணியளவில் கிள்ளான் நகரில் 48 வயதான அப்பெண் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபரூக் எஷாக் தெரிவித்தார். அடுத்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி சபா, உள்ள கோத்தா கினாபாலுவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் கலைநிகழ்ச்சி தொடர்பான விளம்பரத்தை பேஸ்புக்கில் தாம் கண்டதாக தன் நண்பரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் 53 வயதான ராக் பாடகர் ஒருவர் போலீசில் புகார் செய்ததாக அவர் கூறினார். தாமும் பங்கு பெறுவதாக கூறப்படும் அந்த கலைநிகழ்ச்சிக்கு வெ.199 முதல் வெ.649 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்த கச்சேரியில் பங்கேற்பதற்கான எந்த ஒப்பந்தத்தையும் வழங்கவில்லை அல்லது கையெழுத்திடவில்லை என்று அந்த பாடகர் கூறியதாக அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மோசடி உள்ளிட்ட இரு முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்ட அப்பெண் நேற்றிலிருந்து மூன்று நாட்களுக்கு விசாரணைக்கா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மோசடி குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் இப்புகார் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.