உலு கிள்ளான், நவ 3 - வரும் 15வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டால் நேர்மையான ஆட்சியைத் தொடர அது உறுதியாக உள்ளது. ஷெரட்டன் நகர்வு காரணமாகத் தடைபட்ட சில திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள அந்த கூட்டணி விரும்புவதாக சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். எங்கள் அனுபவம் (நாட்டை ஆட்சி செய்த) 22 மாதங்கள் மட்டுமே நீடித்தது. நாங்கள் நிர்வாகத்தை மறுசீரமைக்கும்போது மிகவும் வேதனையான அனுபவமாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். எங்களுக்கு அங்கு வேதனையான அனுபவங்கள் இருந்தாலும், புத்ராஜெயாவை வரும் பொதுத் தேர்தலில் கைப்பற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். 22 மாத காலத்தில் வைத்ததை மீண்டும் நிலை நிறுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார். கடவுள் அருளால் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தையும் கண்ணியத்தையும் மீட்டெடுக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம் என்று அவர் நேற்றிரவு இங்குள்ள ஸ்கேட் பார்க் ஏயு5 இல் நடைபெற்ற இரவு விருந்து மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் அவர் கூறினார். மலேசியாவின் ஊழல் குறியீட்டு பட்டியல் (சிபிஐ) பக்கத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் வெற்றிக்கு தெளிவான சான்றாகும் என்று கோம்பாக் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளருமான அவர் தெரிவித்தார். பக்கத்தான் நிர்வாகத்தின் போது சிபிஐ குறியீடு 61 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் எங்களிடம் உள்ளன. ஒரு வருடத்திற்குள் இந்தக் குறியீட்டைக் குறைத்தோம் என்றார் அவர். ஆனால், பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் சிபிஐ குறியீடு 58 விழுக்காட்டிற்கு அதிகரித்தது. அதன் பின்னர் வந்த பாரிசான் ஆட்சியில் அந்த குறியீடு 62 விழுக்காடாக உயர்ந்தது என அவர் சொன்னார்.