ஷா ஆலம், நவ 4- சமூகத் தலைவர்களுக்கான அலவன்சை மாநில அரசு அடுத்தாண்டில் உயர்த்தவிருக்கிறது. இந்த அலவன்ஸ் உயர்வு குறைந்த பட்ச சம்பள விகிதத்தைவிட அதிகமாக இருக்கும்.
இங்குள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் நேற்று 1,000 சமூகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு நிகழ்வின் போது இத்தகவலை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெளியிட்டார்.
அடுத்தாண்டில் கிராம சமூக மேம்பாட்டு மன்றம் (எம்.பி.கே.கே.) மற்றும் இந்திய சமூகத் தலைவர்களின் (கே.கே.ஐ.) அலவன்ஸ் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்வோம். அந்த அலவன்ஸ் குறைந்த பட்ச சம்பளத்தை விட அதிகமாக இருக்கும் என்று தலைவர்களின் பலத்த கரகோஷத்திற்கிடையே அவர் கூறினார்.
உங்களுக்கு தெளிவான செய்தியை கூற விரும்புகிறேன். ஒரே குழுவாக இணைந்து எந்நேரமும் பாடுபடுங்கள். காரணம் நமது சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பானுக்குச் சொந்தமானது என்று அவர் சொன்னார்.
விரிவான ஆய்வுக்குப் பின்னர் குறைந்த பட்ச சம்பள விகிதத்தை 1,500 வெள்ளியாக கடந்த மே மாதம் முதல் தேதி அரசாங்கம் நிர்ணயித்தது.
பிங்காஸ் எனப்படும் மக்கள் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3.600 வெள்ளி வழங்கப்படும் தகவலையும் அமிருடின் இந்நிகழ்வில் நினைவுக்கூர்ந்தார்.
முன்பு கிஸ் திட்டத்தின் (சிலாங்கூர் விவேக பரிவு அன்னையர் திட்டம்) மூலம் மாதம் 200 வெள்ளி வழங்கினோம். இப்போது 300 வெள்ளியாக உயர்த்தியுள்ளோம். நாம் உதவித் தொகையை குறைத்து விட்டோம் என்று யாராவது கூறினால் அது உண்மையல்ல என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் காரணத்தால் அத்திட்டத்தை நம் மறுசீரமைப்பு செய்துள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தவிர, 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஒவ்வோராண்டும் 100 வெள்ளிக்கான ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெறுவதோடு மரண சகாய நிதியாக 500 வெள்ளி வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.