ECONOMYMEDIA STATEMENTSELANGORYB ACTIVITIES

அடுத்தாண்டில் 39 திட்டங்களை மேற்கொள்ள எம்.பி.எஸ்.ஜே. வெ.12.54 கோடி ஒதுக்கீடு

பூச்சோங், நவ 4- அடுத்தாண்டில் 39 புதிய திட்டங்களை மேற்கொள்ள
சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஜே.) 12 கோடியே 54 லட்சம்
வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
பெர்சியாரான் கெவாஜிப்பான் மற்றும் பெர்சியாரான் சுபாங் பெர்மாயில்
அடுக்குச் சாலை சந்திப்பை நிர்மாணிப்பதும் அத்திட்டங்களில் அடங்கும்
என்று சுபாங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார்
கூறினார்.
அப்பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்
நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு மூன்று கோடி வெள்ளி
செலவு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் வரு 2028ஆம் ஆண்டில் முற்றுப் பெறும் என
எதிர்பார்க்கிறோம். இது தவிர, ஜாலான் பண்டார் பூச்சோங் ஜெயா மற்றும்
ஜாலான் தியோங் இணைப்புச் சாலையும் 60 லட்சம் வெள்ளி செலவில்
நிர்மாணிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள தாமான் வாவாசானில் ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு
உறுப்பினர் இங் ஸீ ஹான் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுத்
தொகுதி மற்றும் பொது வசதி நிர்மாணிப்புத் திட்ட தொடக்க நிகழ்வில்
கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
சுபாங் ஜெயா எஸ்எஸ்19 மற்றும் ஸ்ரீ செர்டாங் தாமான் தாசேக்கில் உள்ள
மேடான் செலேரா எனப்படும் உணவு விற்பனை மையத்தை கூடுதல்
வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்க மாநகர் மன்றம் திட்டமிட்டுள்ளதாகவும்
டத்தோ ஜோஹாரி தெரிவித்தார்.
மேலும், அடுத்தாண்டில் சாலைகள், சாலை சொத்துக்கள், கால்வாய்,
வடிகால் மற்றும் பொழுது போக்கு மையங்களை மேம்படுத்துவதற்காக
மாநகர் மன்றம் 4 கோடியே 94 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை
ஒதுக்கியுள்ளது என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார்.

Pengarang :