கோத்தா கினபாலு, நவ 6- தெனோம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் மையத்தில் நேற்று நிகழ்ந்த களேபரம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக கே.டி.எம். எனப்படும் சமூக ஜனநாயக நல்வாழ்வு கட்சியின் தலைவர் டத்தோ பீட்டர் அந்தோணி நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
எனினும், மெலாலாப் சட்டமன்ற உறுப்பினருமான அவர் இன்று காலை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் 24ஏ(2) வது பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 147வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபா மாநில போலீஸ் ஆணையர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லா கூறினார்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக டத்தோ பீட்டர் அந்தோணி நேற்று கைது செய்யப்பட்டார். இதன் தொடர்பான விசாரணை சீராக நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட பீட்டர் இன்று காலை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
வேட்பு மனுத் தாக்கல் மையத்திற்கு முன் கே.டி.எம்.கட்சி உறுப்பினர்கள் என நம்பப்படும் நபர்கள் களேபரத்தில் ஈடுபடுவதையும் அத்துமீறிய கும்பலைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசவதையும் சித்தரிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன.