புத்ரா ஜெயா, நவ 8- மலேசியாவுக்கு ஆட்களை கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று தாய்லாந்து பெண்களை அரச மலேசிய போலீஸ் படை நேற்று தாய்லாந்து அரச காவல் துறையிடம் ஒப்படைத்தது.
முப்பது வயது மதிக்கத்தக்க அந்த மூன்று பெண்களின் பெயர்களும் தாய்லாந்து போலீசாரின் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.
தாய்லாந்து போலீசாரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட மலேசிய போலீசார் கடந்த மாதம் 29ஆம் தேதி இரு இந்தோனேசியர்களையும் சந்தேகத்திற்குரிய மூன்று பெண்களையும் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
அவ்விரு இந்தோனேசியர்களும் மனிதக் கடத்தலில் நேரடியாக சம்பந்தப்படவில்லை. மாறாக, அவர்கள் இந்நாட்டில் அந்த பெண்களிடம் வேலை செய்து வந்துள்ளனர். கைதான அந்த ஐவர் தவிர்த்து இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருப்பதாக நாங்கள் சந்தேகிக்கவில்லை என்றார் அவர்.
இந்த அதிரடிச் சோதனையின் போது இரு இந்தோனேசியர்கள் மற்றும் இரு தாய்லாந்து பிரஜைகளை உள்ளடக்கிய நான்கு பெண்களையும் தாங்கள் அந்த கும்பலிடமிருந்து காப்பாற்றியாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.