கோலாலம்பூர், நவ 14- இஸ்தான்புல் இஸ்திக்லால் சாலையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகளுடன் தாங்கள் அணுக்கமான தொடர்பில் இருந்து வருவதாக அந்நாட்டிலுள்ள மலேசிய தூதரக அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த அறிக்கை வெளியிடப்படும் வரை இச்சம்பவத்தில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டது தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இத்தாக்குதலுக்கு காரணமானவர்களை அதிகாரிகள் விரைவில் கண்டு பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவார்கள் என நம்புகிறோம் என அது கூறியது.
தற்போதைக்கு மிகுந்த விழிப்புடன் இருக்கும் அதே வேளையில் இஸ்தான்புல் நகரில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வதையும் தவிர்க்கும்படி அந்நாட்டிலுள்ள மலேசியர்களை அந்த அலுவலகம் கேட்டுக் கொண்டது.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அறுவர் உயிரிழந்ததோடு 81 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.