ஷா ஆலம், நவ 15- ஷா ஆலம் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் கடந்த பத்து நாட்களாக மேற்கொண்டு வரும் பிரசாரத்திற்கு வாக்காளர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
இத்தொகுதியிலுள்ள பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் ஆதரவை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு தெரிவித்துள்ளனர்.
நான் சூராவ் மற்றும் பள்ளிவாசலுக்கும் கடைகள், பாசார் மாலாம், பாசார் தானி உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று இளையோர் உள்ளிட்ட தரப்பினரிடம் பிரசாரம் செய்துள்ளேன். அவர்களில் 70 முதல் 80 விழுக்காட்டினர் ஹராப்பானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தொகுதி வேட்பாளர் அஸ்லி யூசுப் கூறினார்.
ஷா ஆலம் தொகுதி மக்களின் ஆதரவு மற்றும் தேர்தல் பணியாளர்களின் கடும் உழைப்பின் வாயிலாக இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு நமக்கு சாதகமாக இருக்கும் என பெரிதும் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள செக்சன் 13இல் உள்ள சேவை மையத்தில் ஷா ஆலம் தொகுதிக்கான ஹராப்பான் கூட்டணியின் ஆறு அம்ச தேர்தல் கொள்கையறிக்கையை வெளியிட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வரும் 19 ஆம் தேதியன்று தங்களின் ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்றுமாறு ஷா ஆலம் வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
வரும் சனிக்கிழமை திரளாக வந்து வாக்களிக்கும்படி ஷா ஆலம் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஷா ஆலமில் ஹராப்பான் கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றி நாட்டின் பத்தாவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்றார் அவர்.