ஷா ஆலம், நவ 22- செலாயாங் நகராண்மைக் கழகத்தின் (எம்.பி.எஸ்.) சேவை, வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கருத்துக் கணிப்பில் பங்கேற்று பதில்களை அளிப்பதன் மூலம் 100 வெள்ளி ரொக்கப் பரிசை வெல்வதற்குரிய வாய்ப்பு பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மேம்பாடு திட்டமிடலுக்காக மேற்கொள்ளப்படும் இந்த கருத்துக் கணிப்பில் forms.gle/Czp7xdXc3yaRLwpm9 என்ற அகப்பக்கம் அல்லது எம்.பி.எஸ். சமூக ஊடகங்கள் மூலமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை பங்கேற்கலாம் என்று நகராண்மைக் கழகத்தின் பொது உறவுப் பிரிவு கூறியது.
இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்று முறையான பதில்களை அளிக்கும் 20 பங்கேற்பாளர்களுக்கு தலா 100 வெள்ளி பரிசாக வழங்கப்படும் .
இந்த கருத்துக் கணிப்பின் வெற்றியாளர்கள் பொத்தாம் பொதுவான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வெற்றியாளர்களின் பெயர்கள் அடுத்தாண்டு ஜனவரி 16ஆம் தேதி எம்.பி.எஸ். சமூக ஊடகங்களில் அறிவிக்கப்படும் என அது தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் சேவை மற்றும் வசதிகளை தரம் உயர்த்துவதற்கு ஏதுவாக பொது மக்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெறும் நோக்கில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதாக அப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.