பெட்டாலிங் ஜெயா, நவ 23- கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு பிரசித்தி பெற்ற விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் மாநிலத்தில் விளையாட்டு சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் புத்துயிர் பெறுகின்றன. தொற்றுநோய்க்கு பிந்தைய கட்டத்தில் அதாவது இந்த ஆண்டில் ஆசிய பூப்பந்து சாம்பியன்ஷிப், லீ டூர் டி லங்காவி ஆகிய போட்டிகளோடு சிலாங்கூர் கோல்ப் மாஸ்டர்ஸ் போட்டியும் இன்று தொடங்குகிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். எனவே, இது சுற்றுலா நடவடிக்கைகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பொருளாதார மீட்சி நடவடிக்கையாகும். ஆயினும், இதன் முக்கிய உந்து சக்தியாக விளங்குவது விளையாட்டு நடவடிக்கைகளே என்று அவர் நேற்று ஸ்ரீ சிலாங்கூர் கோல்ப் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். இதற்கிடையில், மாநிலத்தில் உள்ள பல கோல்ப் கிளப்புகள் பெரும்பாலும் தொழில்முறை விளையாட்டாளர்கள், அமெச்சூர் அல்லது சமூக விளையாட்டாளர்களை ஈர்க்கும் மையமாக விளங்குகிறது என்று அவர் சொன்னார். அத்தகைய ஈர்ப்பு அம்சங்கள் நிறைந்த இடங்களில் ஒன்றாக ஸ்ரீ சிலாங்கூர் கோல்ப் கிளப் விளங்குகிறது. ஏனெனில் குறிப்பாக வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் எப்போதும் மக்கள் இங்கு நிரம்பியிருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். சுற்றுலாத் துறை சார்ந்தவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசின் 2022 வரவு செலவுத் திட்டத்தில் 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு 11 கோடியே 46 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமிருடின் தெரிவித்தார்.