கோலாலம்பூர், நவ 28- பலத்த காற்றுடன் கூடிய கன மழையில் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் இங்குள்ள ஜாலான் பாண்டான் இண்டா மற்றும் பாண்டான் ஜெயா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை நிகழ்ந்தது.
இவ்விரு சம்பவங்களிலும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.
இந்த பேரிடர் தொடர்பில் நேற்று மாலை 3.30 மணியளவில் தகவல் கிடைத்ததை தொடர்ந்து பத்து நிமிடங்களில் தங்கள் குழு ஜாலான் பண்டான் 2/3 இல் உள்ள சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் சொன்னார்.
அங்கு மரம் விழுந்து இரு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதைக் கண்டனர். அதனைத் தொடர்ந்து மாலை 3.38 மணியளவில் பண்டான் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மரம் விழுந்தது தொடர்பில் மற்றுமொரு புகாரை நாங்கள் பெற்றோம். இச்சம்பவத்தில் மரம் விழுந்து புரோட்டோன் வாஜா காரும் நிசான் வேனட் ரக வேனும் சேதமடைந்தன என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டதாக நோராஸாம் மேலும் தெரிவித்தார்.