ஷா ஆலம், நவ 28- நாடு பணவீக்கப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள போலும் நிதி நிர்வாகத்தை சிறப்பான முறையில் கையாளக்கூடிய ஆற்றலை மாநில அரசு கொண்டுள்ளது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மாநிலத்தின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இதற்கு தக்க சான்றாகும் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாக்கல் செய்த இந்த வரவு செலவுத் திட்டம் முழுமையானதாகவும் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் உள்ளதாக அவர் சொன்னார்.
நாட்டில் பணவீக்கப் பிரச்சனை நிலவி வந்த போதிலும், மாநிலத்தின் சிறப்பான நிதி நிர்வாகம் காரணமாக கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக வருமானத்தை ஈட்‘ட முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டின் மதிப்பு 100 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, சமய வகுப்பு ஆசிரியர்கள், பாரம்பரிய கிராமத் தலைவர்கள், கம்போங் பாரு/பாகான் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத் தலைவர்களுக்கான அலவன்ஸ் தொகையும் 1,500 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தலைமையிலான சிலாங்கூர் அரசாங்கத்தின் சாதனைகளாக இவை விளங்குகின்றன. இந்த உதவித் தொகை உயர்வு வறுமைக் கோட்டை விட அதிகமாகும் என்று அவர் சொன்னார்.
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 245 கோடி வெள்ளி மதிப்பினலான 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை கடந்த வெள்ளிக் கிழமை தாக்கல் செய்தார்.