கோலாலம்பூர், நவ 28- நாட்டின் மக்கள் தொகையில் 91 லட்சத்து 90 ஆயிரம் பேர் 18 வயதுக்கும் குறைவான சிறார்கள் என்று மலேசிய புள்ளி விபரத்துறை கூறுகிறது.
அவர்களில் 47 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆண்கள் என்றும் 44 லட்சத்து 40 ஆயிரம் பேர் பெண்கள் என்றும் அத்துறை வெளியிட்ட 2022 ஆம் ஆண்டிற்கான மலேசிய சிறார் கணக்கெடுப்பு மீதான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள 3 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகையில் இத்தரப்பினர் 28.1 விழுக்காடாக உள்ளதாக புள்ளி விபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.
ஐந்து விழுக்காட்டிற்கும் குறைந்த வயதுடைய சிறார்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 90 ஆயிரமாக அதாவது 26 விழுக்காடாக உள்ளதாக கூறிய அவர், அவர்களில் ஆண்கள் 11 லட்சத்து 20 ஆயிரமாகவும் பெண்கள் 11 லட்சத்து 70 ஆயிரமாக உள்ளனர் என்றார்.
இவ்வாண்டில் 18 வயதுக்கும் குறைவானோர் அதிகம் வசிக்கும் பிராந்தியமாக புத்ரா ஜெயா விளங்குகிறது. இங்குள்ள ஒரு லட்சத்து இருபதாயிரம் மக்கள் தொகையில் 41.6 விழுக்காட்டினரான அவர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் கிளந்தானில் 35.3 விழுக்காட்டினரும் திராங்கானுவில் 34 விழுக்காட்டினரும் பினாங்கில் 23.4 விழுக்காட்டினரும் உள்ளனர்.
சிலாங்கூரில் வசிக்கும் 18 வயதுக்கும் கீழ்ப்பட்டோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 10 ஆயிரம் பேராக உள்ள வேளையில் ஜோகூரில் இந்த எண்ணிக்கை 11 லட்சத்து 20 ஆயிரமாகவும் சபாவில் 10 லட்சத்து 60 ஆயிரமாகவும் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.