ஷா ஆலம், நவ 28- கட்டாரில் நடைபெறும் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் முடிவுகள் மீது சூதாட்டம் நடத்தும் கும்பலின் முகவர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கெப்போங், தாமான் மலுரியில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை இரவு 10.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் அந்நால்வரும் கைது செய்யப்பட்டதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்சோதனை நடவடிக்கையின் போது மூன்று கைப்பேசிகள், மடிக்கணினி, மோடம் மற்றும் வீட்டுச் சாவி உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி போ எங் லாய் கூறினார்.
அந்த கும்பல் அந்த வீட்டிலிருந்தவாறு கடந்த ஒரு மாத காலமாக சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.
இதனிடையே, ஈப்போ மற்றும் ஹிலிர் பேராக்கில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் சோகா நடவடிகைகளில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக பேராக் மாநில போலீசார் கூறினர்.
இருபது முதல் 50 வயது வரையிலான அம்மூவரையும் கைது செய்ததன் மூலம் சூதாட்டப் பணமான 900 வெள்ளி கைப்பற்றப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.