ECONOMYMEDIA STATEMENT

இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் பலி, ஐவர் காயம்- குளுவாங்கில் சம்பவம்

குளுவாங், நவ 29- கார் மற்றும் வேன் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்ததோடு மேலும் ஐவர் காயங்களுக்குள்ளாகினர். இச்சம்பவம், ஜாலான் குளுவாங்-தெங் வா ஹிங் சாலையின் 15வது கிலோ மீட்டரில் நேற்று மாலை 4.00 மணியளவில் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் காரின் ஓட்டுநரான முகமது ஹபிக் முகமது பைசால் (வயது 20) மற்றும் பயணியான முகமது கைரில் ரோஸ்லி (வயது 17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமது நோ கூறினார்.

மற்றொரு பயணியான அரிபுடின் கைரும் அப்துல் காபார் (வயது 21) மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது மரணமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பயணியும் வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் கூறினார்.

குளுவாங்கிலிருந்து வந்து கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்தடத்தில் வந்து கொண்டிருந்த வேனை மோதியது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :