ஷா ஆலம், டிச 2- கோல சிலாங்கூரிலுள்ள பாரம்பரிய விளையாட்டு அருங்காட்சியகம் அடுத்தாண்டு மத்தியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
அந்த அருங்காட்சியகத்தில் உள் வடிவமைப்பு மற்றும் கண்காட்சிக் கூடம் கடந்த நவம்பர் 30ஆம் தேதி தயாராகிவிட்ட நிலையில் கடைசிக் கட்ட சீரமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
அந்த அருங்காட்சியகத்தின் வெளிப்புறச் சுவர்களில் சுவரோவியம் வரையும் பணி வரும் டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி ஆண்டு இறுதி வரை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
பாரம்பரிய விளையாட்டு அருங்காட்சியகம் அடுத்தாண்டு ஜனவரி மத்தியில் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று மாநில சட்டமன்றத்தில் இன்று 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூய்ரியா ஜூல்கிப்ளி மாநிலத்தின் பாரம்பரிய சொத்துக்கள் பராமரிக்க படுவதற்கு ஏதுவாக கோல சிலாங்கூர் பாரம்பரிய விளையாட்டு அருங்காட்சியகம் சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்