புத்ராஜெயா, டிச 5- மலேசியாவை உயர் வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதில் தாம் முழு கவனத்தையும் செலுத்தவுள்ளதாக பொருளாதார அமைச்சர் பொறுப்பை புதிதாக ஏற்றுள்ள ரபிஸி ரம்லி கூறினார்.
தொழில்துறை மற்றும் பொருளாதார நடவடிக்கைள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதைக் கருத்தில் கொள்கையில் உயர் வருமானம் கொண்ட நாடாக மலேசியா மாறுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக அவர் சொன்னார்.
சிறப்பான வளர்ச்சியைக் காணாத மற்றும் அதிகமானோர் ஏழைகளாக உள்ள மாநிலங்கள் மீது தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் மீது பொருளாதார ரீதியாகவும் வறுமை ஒழிப்பு வாயிலாகவும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று இன்று அமைச்சில் தனது முதல் நாள் பணியைத் தொடக்கிய போது அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இது தவிர நீடித்த மேம்பாட்டு இலக்கு, அறிவார்ந்த பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் மீதும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
வகுக்கப்பட்ட திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசாங்கத்தின் மேல் மட்டம் முதல் அடிமட்டம் வரை வலுவான ஒத்துழைப்பு நிலவுவது அவசியம் என்றும் அவர் சொன்னார்.