ஷா ஆலம், டிச 7- மொத்தம் 245 கோடி வெள்ளி மதிப்பிலான சிலாங்கூர் அரசின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு மாநில சட்டமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்தது.
இந்த வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் மாநில சட்டமன்றத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
நிர்வாகச் செலவினங்களுக்கு 125 கோடி வெள்ளியும் மேம்பாட்டுச் செலவினங்களுக்கு 120 கோடி வெள்ளியும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்திற்கான 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 25ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் மீதான விவாதம் அவையில் அண்மைய சில தினங்களாக நடைபெற்று வந்தது.
இந்த வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் இருபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மக்கள் நலனை மையமாக கொண்டு அடுத்தாண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்களுக்காக இந்த பட்ஜெட் அங்கீகரிக்கப்பட்டது என இங் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.