பத்தாங் காலி, டிச 18- இங்குள்ள ஃபாதர் ஆர்கானிக் ஃபார்ம் பொழுதுபோக்கு முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை தேடி மீட்கும் நடவடிக்கையில் தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடங்களில் பொதுமக்கள் இருப்பதை அனுமதிக்க முடியாது என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.
மீட்பு நடவடிக்கைகளில் தங்களுக்கு உதவியாக எந்த தரப்பினர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்பதை இந்த நடவடிக்கைக்கு தலைமையேற்றுள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகாவே முடிவு செய்ய முடியும் என்று அவர் சொன்னார்.
தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடம் மிகப்பெரியது என்பதால் இங்கு பொது மக்களையும் அனுமதிக்கும் பட்சத்தில் குழப்பம் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த மீட்பு நடவடிக்கையின் போது தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படும் சிவப்பு பகுதி வரை சென்று செய்தி சேகரிப்பதற்கும் படம் பிடிப்பதற்கும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க மலேசிய தகவல் இலாகாவுக்கும் அரச மலேசிய போலீஸ் படை க்கும் இடையிலான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த இலாகாவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.