ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

நிலச்சரிவு பகுதியில் தொடர் மண்சரிவைத் தடுக்க குறுகிய கால நடவடிக்கை- ஜே.கே.ஆர். மேற்கொள்கிறது

புத்ராஜெயா, டிச 19- அண்மையில் நிலச்சரிவுக்குள்ளான ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் முகாம் பகுதியில் தொடர் மண் சரிவு ஏற்படாதிருக்க குறுகிய கால நடவடிக்கையாக அப்பகுதியிலுள்ள மலைச்சாரல்களை நெகிழிப்பைகளை கொண்டு மூடும் நடவடிக்கையில் பொதுப்பணி இலாகா ஈடுபடவுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்குள் மழை நீர் நுழையாதிருக்கும் வகையில் அப்பகுதியிலுள்ள கால்வாய்களை இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு மாற்றும் பணி மேற்கொள்ளப்படுவதோடு சம்பவ இடத்தில் மண் நகர்வை கண்டறிவதற்காக சென்சர் எனப்படும் நுண் உணர்திறன் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணி இலாகா கூறியது.

சம்பவ இடத்தில் குறிப்பாக முகாம்கள் இருந்த பகுதியில் நிலத்தடி நீரோட்டம் வேகமாக இருப்பது பொதுப்பணித் துறையின் மலைச்சாரல் தடவியல் மற்றும் பொறியியல் துறையின் சோதனையில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவ்விலாகா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மண் பிடிமானம் இழக்கும் இரு சம்பவங்கள் 20 மற்றும் 30 நிமிட இடைவெளியில் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டது. முகாம் பகுதியில் நிகழ்ந்த முதலாவது சம்பவம் காரணமாக சாலையோர மலைச்சரிவு பலவீனமடைந்து தொடர் மண்சரிவு ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது என அது குறிப்பிட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.42 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்த 94 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 24 பேர் உயிரிழந்ததோடு மேலும் 61 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

 


Pengarang :