கோலாலம்பூர், டிச 19- பத்தாங் காலியில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மக்களவை இன்று அனுதாபம் தெரிவித்துக் கொண்டது.
மக்களவையின் புதிய சபாநாயராக பதவியேற்றுக் கொண்ட டத்தோ ஜொஹாரி அப்துல் தமதுரையில் பல உயிர்களைப் பலி கொண்ட அந்த பேரிடர் குறித்து தாங்கள் ஆழ்ந்த வருத்தம் கொள்வதாகக் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனவுறுதியுடன் இருக்கும் வேளையில் துயரத்திலிருந்து மீண்டு வருவர் எனவும் எதிர்பார்க்கிறேன். இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மக்களவை சார்பாகவும் மக்களவை உறுப்பினர்கள் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
பேரிடர் நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், மீட்பு நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து முஸ்லீம் உறுப்பினர்கள் அல்-ஃபாத்திஹா சுலோகங்களை வாசித்த வேளையில் முஸ்லீம் அல்லாத உறுப்பினர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.