கோலாலம்பூர், டிச 19- இன்று தொடங்கிய பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட 222 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கிற்கு தம்புன் உறுப்பினரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றார்.
அன்வாரைத் தொடர்ந்து துணைப் பிரதமர்களான பாகான் டத்தோ உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி, பெத்ரா ஜெயா உறுப்பினரான டத்தோஸ்ரீ பாடிலா யூசுப் ஆகியோர் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதிவு பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
இன்றையக் கூட்டத் தொடரில் இரு மந்திரி புசார்கள் மற்றும் ஒரு முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
சிலாங்கூர் மந்திரி புசாரும் கோம்பாக் உறுப்பினருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் நாடாளுமன்ற உறுப்பினரும் போர்ட்டிக்சன் உறுப்பினருமான டத்தோஸ்ரீ அமினுடின், பினாங்கு முதலமைச்சரும் பத்து காவான் உறுப்பினருமான சாவ் கோன் இயோ ஆகியோரே அம்மூவராவர்.
நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தல் நடைபெற்று சரியாக ஒரு மாதத்திற்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஒரு மாத கால இடைவெளியில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக நியமிக்கப்பட்டார்.