SELANGOR

பொது மக்களின் வசதிக்காகப் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 13 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன

ஷா ஆலம், டிச 22- இரவு நேரங்களில் பொது மக்களின் வசதி மற்றும்
பாதுகாப்புக்காக புக்கிட் மெலாவத்தி தொகுதியிலுள்ள மூன்று இடங்களில்
13 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன.

ஜாலான் ராஜா அப்துல்லா, கம்போங் தஞ்சோங் கிராமாட் மற்றும்
கம்போங் செபக்காட் ஆகிய இடங்களில் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய
இந்த விளக்குகளைப் பொருத்தும் பணி நான்கு நாட்களுக்கு முன் முற்றுப்
பெற்றதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி
கூறினார்.

அந்த மூன்று பகுதிகளிலும் இதுநாள் வரை சாலை விளக்குகள்
இல்லாதிருந்ததோடு அதிக விபத்துகளும் நிகழ்ந்தன. இது தவிர காட்டுப்
பன்றி போன்ற விலங்குகளின் நடமாட்டமும் அதிகம் காணப்பட்டது
என்றார் அவர்.

அப்பகுதியில் சாலை விளக்குகளைப் பொருத்தக் கோரி பொது மக்கள்
தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததைத் தொடர்ந்து அடிப்படை வசதிகள்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரிடம் மனு செய்தோம். எங்களின்
கோரிக்கையை ஏற்று விளக்குகளைப் பொறுத்துவதற்கு அவர் ஏற்பாடு
செய்தார் என்று ஜூவாய்ரியா மேலும் சொன்னார்.

இந்த சாலை விளக்குகள் பொருத்தப்பட்டதன் மூலம் அப்பகுதி மக்கள்
இரவு நேரங்களில் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்ள
முடியும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :