ஷா ஆலம், ஜன 1- நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன் கருதி இவ்வாண்டு நடைபெறும் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்று மந்திரி புசார் நம்பிக்கை கொண்டுள்ளார். கடந்தக 2018 ஆம் ஆண்டு முதல் கூட்டணியின் சிறப்பான அடைவு நிலைகளை விவரித்த டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, உண்மைகள் மற்றும் அறிவியலின் அடிப்படையில் நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயை நிர்வகிப்பதில் சிலாங்கூர் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது என்றார். மக்களுக்குப் பயனளிக்கும் 48 நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் மாநில அரசு 'சிலாங்கூர் கேரிங்' எனும் பரிவுத் திட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றார். 2023 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநிலத் தேர்தல் தவிர்க்க முடியாத விவாதப் பொருளாக இருக்கும். ஹராப்பானின் தூணாக விளங்கும் டாருள் ஏசான் மாநிலத்தின் சிறப்பான மற்றும் வெற்றிகரமான நிர்வாகத்தைத் தொடர மக்கள் ஹராப்பான் கூட்டணிக்கு மகத்தான ஆதரவை வழங்குவார்கள் என நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார. தேசத்தின் தூணாகவும் அடித்தளமாகவும் சிலாங்கூரை நிலைநிறுத்துவதில் 2008 முதல் ஹராப்பானின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று தனது புத்தாண்டு 2023 செய்தியில் கூறினார் . வளமான, நட்புறவான மற்றும் செழிப்பான அரசை உருவாக்குவதிலும் நிலைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் சிலாங்கூரை ஆள்வதிலும் தனக்குள்ள திறனை ஹராப்பான் நிரூபித்ததாகவும் அமிருடின் கூறினார். இதற்கிடையில், மாநில மக்களின் நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய எந்தவொரு தீவிரவாதம் மற்றும் வெறுப்பு அரசியல் நடவடிக்கைகளை சிலாங்கூர் அரசு கடுமையாக எதிர்க்கிறது என்றும் அவர் சொன்னார்.