ஷா ஆலம், ஜன 2- உணவகங்கள் மற்றும் உணவு அங்காடிக் கடைகளில் உணவைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் முகக் கவரி அணிந்திருப்பதை உறுதி செய்ய சிப்பாங் நகராண்மைக் கழகம் தொடர்ந்தாற்போல் சோதனைகளை நடத்தும்.
இந்த உத்தரவை மீறும் தரப்பினருக்கு அறிவுரை கூறும் அணுகுமுறையை தமது தரப்பு தொடக்கத்தில் கடைபிடிக்கும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.
உணவைக் கையாளும் போது முகக்கவரி அணியாத உணவக அல்லது உணவு அங்காடி பணியாளர்களுக்கு தொடக்கத்தில் அறிவுறுத்தல்களையும் பின்னர் எச்சரிக்கையும் விடுப்போம்.
அவர்கள் தொடர்ந்து இத்தகைய தவறுகளைப் புரிந்தால் கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிலாங்கூர் கினிக்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
உணவகப் பணியாளர்களும் உணவு அங்காடி நடத்துநர்களும் கட்டாயம் முகக் கவரி அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பரப்புரைகளை தாங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிப்பாங் வட்டாரத்திலுள்ள அனைத்து உணவக நடத்துனர்களுக்கும் இந்த தகவல் சென்று சேர்ந்துள்ளதை உறுதி செய்ய அவர்களுக்கு அறிக்கைகளை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
ஜனவரி முதல் தேதி தொடங்கி சிலாங்கூரிலுள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் உணவு அங்காடிக் கடைகளில் பணி புரிவோர் கட்டமாயம் முகக் கவரி அணிய வேண்டும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த டிசம்பர் 29ஆம் தேதி கூறியிருந்தார்.