MEDIA STATEMENTPBT

சிப்பாங்கில் 23 கவுன்சிலர்கள் பதவியேற்பு- நகராண்மைக் கழகத்திற்கு துணைத் தலைவர் நியமனம்

சிப்பாங், ஜன 4- சிப்பாங் நகராண்மைக் கழகத் துணைத் தலைவராக மாநில அரசு செயலகத்தின் சேவை மேலாண்மைப் பிரிவுச் செயலாளர் முகமது ஷா ஓஸ்மின் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இங்குள்ள சிப்பாங் நகராண்மைக் கழகத் தலைமையகத்தில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான நகராண்மைக் கழக உறுப்பினர்களின் பதவியேற்புச் சடங்கின் போது அவர் இந்த புதிய பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் 23 பேர் இவ்வாண்டிற்கான புதிய நகராண்மைக் கழக உறுப்பினர்களாக நகராண்மைக்  கழகத்  தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த பதவி பிரமாண நிகழ்வில் உரையாற்றிய அப்துல் ஹமிட், இத்தவணைக்கு நியமிக்கப்பட்ட 23 நகராண்மைக் கழக உறுப்பினர்களில் 17 பேர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் அறுவர் புதிதாக நியமனம் பெற்றுள்ளனர் என்றார்.

நகராண்மைக் கழக உறுப்பினர் பதவி என்பது ஒரு கௌரவம் அல்ல. மாறாக, அதிக சுமைகளைக் கொண்ட ஒரு பொறுப்பாகும். அவர்கள் பொது நலனில் அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பதோடு சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளையும் நிபுணத்துவதையும் வழங்கக்கூடியவர்களாகவும் திகழ வேண்டும் என அவர் வலிறுத்தினார்.


Pengarang :