ஷா ஆலம், ஜன 15- மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கெஅடிலான் கட்சியின் தேர்தல் இயந்திரம் தீவிரமாக செயல்படத் தொடங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடைபெறும் சிலாங்கூர் மாநில தேர்தல் மாநாடு தேர்தல் அனைத்து நிலையிலும் பிரசார நடவடிக்கையை நாம் முடுக்கி விடுவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.
தொகுதி மற்றும் மாவட்ட வாக்களிப்பு மையம் நிலையிலான அனைத்து தேர்தல் இயந்திரங்களும் முடுக்கி விடப்பட வேண்டும். நமக்கு போதுமான கால அவகாசம் இல்லாததால் குறைந்த பட்சம் மாநாடுகள், கூட்டங்களை நடத்தி திட்டங்கள் மற்றும் தேர்தல் வியூகங்கள் வகுக்க வேண்டும். கூடிய பட்சம் ஆறு மாத காலத்தில் நாம் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
முன்பு, நம்மிடம் அதிகாரம் இல்லாத காலத்தில் கூச்சலிட்டோம், குறைப்பட்டுக் கொண்டோம். இப்போது நமக்கு ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை உள்ளன. காரணம் சட்டமன்றத்தைக் கலைக்கோரும் பரிந்துரையை மந்திரி புசார்தான் மேன்மை தங்கிய சுல்தானிடம் சமர்பிக்க முடியும் என்றார் அவர்.
நான் ஏற்கனவே சொன்னது போல் சட்டமன்றத்தை நாம் உனடியாக கலைக்க மாட்டோம். ஆகவே, நாம் இப்போது தொடங்கி கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இங்குள்ள ஷா ஆலம் ஐடியல் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் கெஅடிலான் கட்சியின் தேர்தல் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைச் சொன்னார்.
பதினைந்தாவது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட களைப்பை போக்குவதற்கும் மத்தியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்ததால் ஏற்பட்ட அளவில்லா மகிழ்ச்சி மற்றும் சொகுசான சூழலுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கும் இந்த மாநாடு முக்கிய தளமாக விளங்குகிறது என்றும் சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர் குறிப்பிட்டார்.