அம்பாங், ஜன 20- அம்பாங்கில் உள்ள நான்கு ஆபத்தான் மலைச்சாரல்களில் மண் நகர்வைக் கண்டறியக்கூடிய முன் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்படும்.
தாமான் மெகா ஜெயா, தாமான் செராயா, தாமான் வங்சா 1, தாமான் புக்கிட் ஜெயா ஆகிய இடங்களில் இந்த கருவிகள் பொருத்தப்படவுள்ளதாக நகர்புற நல்வாழ்வுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இந்த எச்சரிக்கை கருவிகளை கண்காணிக்கும் பொறுப்பை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மேற்கொள்ளும் என்றும் மண் நகர்வு கண்டறியப்படும் பட்சத்தில் நிலச்சரிவு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக மலைச்சாரலை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அது ஈடுபடும் என்றும் அவர் சொன்னார்.
எனினும், நிலச்சரிவு சம்பவங்களைத் தடுப்பது அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தை மட்டும் சார்ந்த பணியில்ல. மாறாக, நில உரிமையாளர்களும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற அம்பாங் வட்டார மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.