அம்பாங் ஜெயா, ஜன 20- அம்பாங் வட்டாரத்திலுள்ள 61 மலைச்சரிவுகளில் இருக்கும் அனைத்து மரங்களையும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் வெட்டவுள்ளது.
நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்வதற்கு காரணமாக விளங்கும் மண் நகர்வைத் தடுப்பதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அக்கழகம் கூறியது.
அந்த 61 மலைச்சாரல்களில் 45 மிகுந்த ஆபத்து கொண்டவையாகவும் 14 ஆபத்தானவையாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகத்தின் பொறியியல் துறை இயக்குநர் ஜப்ருள் ஃபாஸ்ரி முகமது பவுசி கூறினார்.
மரங்களை அகற்றும் பணியை மேற்கொள்ள 73 லட்சம் வெள்ளி செலவு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இத்தொகையை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவத்தார்.
மரங்களை வெட்டும் பணியையும் அப்பகுதியிலுள்ள வடிகால்களை சீரமைக்கும் பணியையும் ஏக காலத்தில் மேற்கொள்ளவிருக்கிறோம். இதன் மூலம் ஆய்வுப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இப்பணிகள் யாவும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
வெட்டப்படும் மரங்கள் ஓராண்டில் மீண்டும் வளர்ந்து விடும். இப்பிரச்சனைக்குத் தீர்வு காண பராமரிப்பு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஆண்டுக்கு 15 லட்சம் வெள்ளி வரை தேவைப்படும் என்றார்.