ஷா ஆலம், ஜன 21- வடக்கு- தெற்று நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் ரெம்பாவ் அருகே கோழி முட்டை ஏற்றிய லோரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்தின் காரணமாக அந்த லோரியிலிருந்த முட்டைகள் சாலை முழுவதும் உடைந்து சிதறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று காலை 9.00 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தின் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கட்டுபாட்டை இழந்த அந்த லோரி சாலையின் இடது புறமிருந்து தடுப்பை மோதி கவிழ்ந்ததாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்ரிண்டெண்டன் ஹஸ்ரி முகமது கூறினார்.
இந்த விபத்தில் லேசான காயங்களுக்குள்ளான 30 வயது லோரி ஓட்டுநர் சிகிச்சைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் அந்த நெடுஞ்சாலையின் வடக்கு தடத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.