உலு பெர்ணம் ஜன 28 ;-சிலாங்கூர் மாநில அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வருவது இம்மாநில மக்கள் அறிந்ததே. மாநிலத்தின் வளம் மக்களுக்கே என்ற கொள்கையில் பல வகையான உதவித் திட்டங்களையும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் முன் எடுத்து வருகிறது சிலாங்கூர் மாநில அரசு.
மாநில அரசு பொருளாதாரத் துறையில் குறிப்பாக வணிகத்தில் இந்தியர்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பிரிவுகளான சிலாங்கூர் அரசின் இந்தியச் சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) மற்றும் இந்தியத் தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்) ஆகியவை மூலம் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பை இந்திய வணிகர்கள் பெற்றுள்ளனர்.
சிறு முதலீடுகள் இன்றி வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்ல சிரமப்படும் வணிகர்களுக்கு உதவியாக உபகரணங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்களில் ஒருவராக திகழ்கிறார் உலு சிலாங்கூர் உலு பெர்ணத்தைச் சார்ந்த திருமதி காளியம்மாள் ராமசாமி ஒரு குறுந்தொழில் முனைவோரான அவர் தேங்காய் பால் பிரித்தெடுக்கும் கருவியை உதவியாகப் பெற்றார்.
இந்த இயந்திரம் சுமார் 9775 வெள்ளி விலை மதிப்பு கொண்டது, இதனை அவரைப் போன்ற ஒரு வியாபாரி வாங்கி பயன்படுத்துவது இயலாத காரியமாகும். மாநில அரசின் இவ்வுதவியின் வழி திருமதி காளியம்மாள் தனது வியாபாரத்தை மேலும் விரிவாக்க முடியும் என அப்பகுதியின் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) தொடர்புத்துறை அதிகாரியான தினேஸ் செல்வராஜ் தெரிவித்தார்.