ரவாங், ஜன 31- ரவாங்கில் அனிஸ் எனப்படும் பிரத்தியேக சிறார்களுக்கான பாலர் பள்ளியை நிர்மாணிக்கும் மாநில அரசின் திட்டத்தை பொதுமக்கள் குறிப்பாக மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் பெற்றோர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
அந்த பாலர் பள்ளி இங்குள்ள கன்றி ஹோம்ஸ் பகுதியில் நிர்மாணிக்கப்பட வேண்டும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் அதிகமாக வசிக்கும் கன்றி ஹோம்ஸ் பகுதியில் இந்த பாலர் பள்ளி அமைக்கப்படுவதை மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் பெற்றோர்கள் பெரிதும் விரும்புவார்கள் என்று அய்ஸூரா அஷான் (வயது 48) கூறினார்.
பாலர் பள்ளியோடு தினசரி பராமரிப்பு மையமாகவும் இந்த அனிஸ் பாலர் பள்ளி அமையும் பட்சத்தில் பிரத்தியேகச் சிறார்களைக் கொண்ட பெற்றோர்களின் சுமை பெரிதும் குறையும் என்றார் அவர்.
இதனிடையே, இந்த பாலர் பள்ளி கன்றி ஹோம்ஸ் பகுதியில் அமைக்கப்படுவதை தாம் வரவேற்பதாக ஜஹாரிமான் அப்துல் கனி (வயது 71) கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளி பிள்ளைகளும் மற்றவர்களைப் போல் கல்வியைத் தொடர்வதற்குரிய வாய்ப்பு கிட்டும் என அவர் சொன்னார்.
வசதி உள்ள பெற்றோர்கள் இத்தகைய குறைபாடு கொண்ட பிள்ளைகளை கட்டணப் பள்ளிகளுக்கு அனுப்ப முடியும். ஆனால் ஏழைகளால் அவ்வாறு செய்ய இயலாது. அப்பிள்ளைகளை வீட்டிலேயே பராமரிப்பதை தவிர வேறு வழி இருக்காது என அவர் குறிப்பிட்டார்.